இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காத எல்லாமும் வல்ல
முப்பந்தல் இசக்கியம்மனின் தாமரை மேவும் தங்கத்திருவடிகள் சரணம்.
உலகியற்றியான்.
தான் படைத்த அந்த
படடணத்தைப் பிரமிப்போடு பார்த்துக்கொண்டு நின்றான் மாமுனி. உலகையேக் கலக்கி வென்ற உன்மத்த
வெறிகொண்டது உள்ளம். சடைகளுக்குள் ஊர்ந்த உயிரொன்றை, தண்டத்தை வைத்து இழுத்து தரையில்
போட்டான். உலகங்கள் பல சுழலும் பால்வெளிக்குள், அவன் படைத்ததும் இனி சுழலும்.
இறைவனுக்கே இணையாகிவிட்ட மிதமிஞ்சிய பெருமைக்குள், சிறிய கழிவிரக்கம் ஒன்று
எப்போதும் அவனை ஆட்கொண்டிருந்தது. யாரை எதிர்த்து நின்று சாதிக்க நினைத்தானோ, அவர்களே
இவனது வெற்றிகளை ஒப்புக்கொள்ளக்கூடிய அளவுக்குப் பெருமைகளைக் கொண்டுவந்த
எண்ணிலடங்கா தவத்தால், அந்த கழிவிரக்கத்தை கழிக்கமுடியாதது கண்டு வியப்புற்றான்.
வெங்கல மேனியிலிருந்து விலகிய மேலாடையை, கமண்டலம் தாங்கிய கரமொன்றினால் சரிசெய்துவிட்டு, நிமிர்ந்த
மேனியும் நேர்கொண்ட பார்வையுமாய் நின்ற மாமுனியின், உடலிலிருந்து கிளம்பிய ஒளி, அவன் படைத்த
உலகத்தின் போக்கைத் தடுமாறச் செய்தது.
ஆகா, மேனியா அது... மேலெங்கும்
மானுடர்களைத் தாக்கும் மலரம்புகளை ஏந்திய வில்போன்று, ஏற்ற இறக்கங்கள் கொண்ட அந்த மாய
உடல் ஒரு கணம் மனதில் மின்னி மறைந்தது மாமுனிக்கு. ஆளண்டாத அடர்ந்த அடவியின்
நடுவில், உயர்ந்த மண்திட்டில் அமர்ந்து, மூச்சினை ஒழுங்காக்கி, நாசி நுனியை
நோக்கிப் பல்லாண்டுகாலம் தவமியற்றிக்கொண்டிருந்த மாமுனியின் தலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த
செஞ்சடையின், உச்சியில் கனன்ற தீப்பிழம்பின் வழி, புகைக்
கீற்றொன்று கிளம்பிற்று. உயிரென்று தொடக்கத்தில் அஞ்சிய சின்னஞ்சிறு உயிரினங்கள், அதன்
அசைவின்மை கருதி, காலப்போக்கில் மாமுனியின் உடல்மீதேறி உயிர் வாழத்
தொடங்கியதில், உடலின் பெரும்பகுதி புற்றால் மூடப்பட்டு இருந்தது. வெளித்தெரிந்த
உடல் பகுதிகளில் இருந்து விரிந்த ஒளி, அந்த வனப்பகுதியில் ஓர் அதிசய
வெம்மையை உருவாக்கியது. அசையாதிருந்த மேனி அசைந்த அந்த நாள், உலகியல்
பார்வைகளிலிருந்துத் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட கண்களில் ஒன்று மெல்ல திறந்த
நாள். அந்த நாளின் நினவுகளிலிருந்து வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்
மாமுனி. தேவாதிதேவர்களும், தன்னடங்கிய தவமுனிவர்களும், தன்னைப்
படைக்கும் தன்மைகொண்ட இறைவன் என்று ஒப்புக்கொண்ட நாளில் உள்ளத்தில் உதித்து
அடங்கிய சோதியின் உள்ளொழிந்திருந்த கருமை, அந்த பெருஞ்சோதியால்
நெருங்கமுடியாத அந்தக் கருமை, அந்த ஒளிவெள்ளத்தின் ஊற்றே அந்தக்
கருமைதானோ என்று கருதும் வண்ணம் திகழ்ந்த அந்தக் காலக்கருமை, அந்தநாளும், அது
உண்டாக்கிய இன்பமும்தானோ. பெருமைகளில் திளைக்கும்போதெல்லாம்
அதன் ஓரத்தில் நமையாட்டுவிக்கும் கழிவிரக்கம் அந்த நாள்தானோ என்று எப்போதும்
சிந்த்திருப்பார் மாமுனி.
மென்காற்றின் சுகந்தம் மேனியைத்
தீண்டியது. நாசிக்கூர்மை வாசத்தை உணரும் முன் உடல் உணர்ந்து சின்னதொரு தளர்வை
அடைந்தது. தீர்க்கமான நாசியை அந்த நாற்றம் நெருங்கியபோது, உடல் அதிர்ந்ததை உணர்ந்தார்
மாமுனி. ஆண்டாண்டு காலம் அந்த வனத்தில் அனுபவித்திராத அற்புத வாசம் அது.
இமைகளிரண்டும் ஒன்றோடொன்று ஒட்டியிருந்ததால் மூடியிருந்த மெல்லிய கோட்டில், ஒரு
பெருவெள்ளத்தின் ஒளிக்கீற்று தட்டுப்பட்டது. அந்த ஒளிக்கீற்று,
குளிரடைந்திருந்த கண்களில் சின்னதொரு வெப்பத்தை உண்டாக்கிற்று. பல்லாண்டுகளுக்கு
முன்பு உணர்ந்த வெம்மையின் பெருக்கமென்று உணரத்தோன்றிற்று. அந்த மெல்லிய
வெம்மையின் மூலத்தைத் தேடி, கண்கள் திறந்துவிடுமோ என்ற
சின்னதொரு அச்சம் முதன்முதலாக முனிவருக்குத் தோன்றியது. வெள்ளிச்சலங்கைகளின்
இசையொன்றை உணர்வதுபோன்ற லயம் உண்டானது. சீரான இடைவெளியில் தன்னை நோக்கி
நெருங்குவதும், விலகுவதுமாக இருந்த தண்டை ஒலி, செவியின் குழிகளில் தேனை விட்டு
விட்டு பாய்ச்சுவது போல இருந்தது. கொலுசு சிணுங்கும் ஓசை, காதை நெருங்கும் போதினில்,
செவிப்பறைகளில் மெல்லிய கூச்சமொன்றை கீச்சிவிட்டது. மென்பறை உருவாக்கிய அதிர்வு
தொண்டை வழி இதயத்தை நெருங்கி, அதன் இயக்கத்துக்கு இடையூறு
செய்தது. புலன்களைக் கட்டுக்குள் வைத்திருக்கக் கடும்பாடு பட்டான் முனிவன்.
இத்தனையாண்டுகால தவக்கோலத்தில் இப்படியொரு அதிர்வை அவன் உடல் அடைந்ததில்லை.
கரணங்கள் உருவாக்கிய அதிர்வு தன் ஆண்மையை அசைக்கும் வழி செல்வதற்குமுன் அவற்றை
இறுக்கி நெஞ்சிலேயே நிறுத்த முனைந்தபோதுதான், மலரினும், பஞ்சினும் மெல்லிய பரிசமொன்றை
அதரங்கள் உணர்வதாக நினைத்துத் திடுக்கிட்டான். நீண்டகாலம் மழிக்காமல் நிறைந்திருந்த
மயிர்களைத் தாண்டி உதடுகள் உணர்ந்த பரிசம், முனிவனின் பழங்கால வாழ்க்கையை ஒரு
சிறுகணத்தில் நினைவுறச்செய்தது. இனிமேலும் தவத்தை விடுவது தவிர்க்கமுடியாதது என்று
நன்றாகப் புரிந்தது. மாமுனிவன் உலகியல் பார்வைக்கு அணியமானான். முதலில் கண்கள் அதை
உணர்ந்தன.
மேனகா வுக்கு புதிய உலகம் ஒன்றைப்
பார்க்க புறப்பட ஆணை கிடைத்தது. எப்போதும் தன் மீதேறி ஊறும் கண்களிலிருந்து
விடுதலை. அவள் தன்னை அலங்காரம் செய்ய நினைத்தாள். ஏற்கனவே மூன்று பேருக்கு
வழங்கப்பட்டு அவர்கள் தோற்றுப்போன பணி. ஆற்றல் மிகுந்த வில்லாளன் தன் கையில் இருக்கும்
ஆகச்சிறந்த அம்பை, போரின் இக்கட்டான
சூழலில் எறிகிறான், நான் தேர்ந்திருக்கும் சிறந்த வாளி நீ, என்று
தலைவன் சொல்லி அனுப்பி இருந்தான் அவளுக்கு. சாதாரண ஆடைகளைக் களைந்துவிட்டு சாகச
அலங்காரத்தை செய்யத் தீர்மானித்தாள் அவள். தன் முன்னே நிற்கும் கடமையின் வீரியம்
அவளுக்குத் தெரியும். திலோத்தமா திரும்பி வந்து, தன்னுடலைத் தானே பழித்ததைப்
பார்த்தாள் அவள். அரம்பை மீண்டு வந்து, தன் மழை மேகமன்ன கூந்தலை
அவிழ்த்துப் பரப்பினாள். ஊர்வசி ஓடி வந்து, இனியிந்த உடலுக்கும் அழகுக்கும்
என்ன மதிப்பென்று மயங்கினாள், மன்மதனைப் பழித்தாள். அந்த
அவமானத்தைத் தான் அடைந்துவிடக்கூடாதென்று நினைத்தாள் அவள். பெண்ணொருத்தி விரும்பி, ஆணொருவனை
அசைக்கமுடியாமல் போகுமென்றால், அப்புறம் பிறப்பிலே பொருளில்லை என
எண்ணினாள்.
தன் அழகிய மேனிதான் ஆகச்சிறந்த ஆடை
என தேர்ந்தாள். சந்தனக்குளியலொன்றை நடத்தினாள். உள்ளக்கிடக்கையை உணரமுடியாத, கடலினும்
பெரிய கண்களுக்கு அஞ்சனம் எழுதினாள். கோடிப்பொன் பரிசாகக் கொட்டினாலும், அவள்
மூடித்திறக்கும் இமையிரண்டிற்கு ஈடாகாதென்று எண்ணும் வண்ணம், கண் எனும்
பூசல் அம்பிற்கு மை பூசினாள். ஏற்றிக் கட்டிய குறத்திக் கொண்டையில் முல்லைச்சரம்
சூடினாள். அதுபோக தன் அடர்ந்த கருங்கூந்தலின் அரைபாதியை, தன் பின்னழகுக்கும் கீழே
நெளியவிட்டாள். சிக்கெடுத்து சீவியபின்னர், ஒரு சின்ன வெட்டுவெட்டித்
திரும்பினாள். மலைமுகட்டில் மோதி வழியும் அருவிபோல, பின்மயிர் மேகலையில் நழுவி மெல்ல விலகியது.
சிரித்துகொண்டாள். திண்பதற்காக மட்டுமன்றி, திண்ணப்படுவதற்காகவும்
படைக்கப்பட்ட பச்சரிசிப் பற்களில் சின்ன விண்மீன் ஒன்று ஒளிர்ந்து மறைந்தது.
கச்சையணிந்த மார்பகங்களில் குங்குமம் அப்பி, முத்துமாலையொன்றை அதன்மேல்
புரளவிட்டாள். செம்பொன்னைக் குழப்பி நகங்களில் தோய்த்தாள். சிந்தாமணி ஆரமொன்றை
பூட்டினாள். குலுங்கும் வளைகளுக்குள் கோதுமைநிறக் கைகளைச் செருகினாள். இடையணிந்த
மேகலையில் மணிகளைக் கோர்த்து, மெல்ல ஆட்டிப்பார்த்து, அதில்
வெளிப்பட்ட தாளலயமறிந்து ஆனந்தம் கொண்டாள். தண்டைகள் திருகி புறப்பட்டாள் பூமி
நோக்கி.
அசைந்தாள், நடைழகும் அன்னத்துக்கே நடைபயிலும்
விதமாக அசைந்தாள். இதைவிடவும் சிறந்ததொன்றை பிரம்மன் இதுவரைக்கும் படைக்கவில்லை
எனும் விதமாக நற்குஞ்சரமும் நாணும் வண்ணம் நடந்தாள். சந்தனவண்ணத்து சுண்ணம் கொண்டு
படைக்கப்பட்ட சுந்தர சிற்பமென வளைந்தாள். வாழை மடலெடுத்து வடிவமைத்தத் தண்டொன்றில்
தாழைமலர் நிறமெடுத்து தடவியது போன்ற தன் குறங்குகள் பிணங்க ஆடினாள். உலக வாழ்வின்
நிலையாமையை உணர்த்தும் வாக்கில், திமிர்ந்த தடநகில்கள் ஏறி
இறங்கும் வண்ணம் நர்த்தனம் புரிந்தாள். செங்காந்தள் மலரொத்த விரல்கள், பகலவனின்
பரிதிகள் என தோன்றும் அளவுக்கு அபிநயங்கள் காட்டினாள். சுழலும்போது விலகிய
மேலாடைகளின் வழி மேனியைத் தீண்டிய மெல்லிய காற்று, அந்த அனுபவத்தை மாமுனியின்
மெலிந்த திரேகத்தில், தீண்டலுக்கு ஏங்கியிருந்த புலன்களிடம் கொண்டு சேர்த்தது.
மேனகாவின் மெல்லிய அசைவுகளில் வளைந்து நெளிந்த வாளிப்பான உடலின் வழி ஊடுருவிய
தென்றல், முனிவனிடம் சலனத்தை உண்டாக்கியதை அவளால் உணரமுடிந்தது.
இப்போது அபிநயத்தில் அன்பைக் குழைக்க விரும்பினாள் அவள். மகாயோக முறையில்
அமர்ந்திருந்த மாமுனியின் மெலிந்து மினுங்கிக்கொண்டிருந்த உடல்மீது உள்ளத்தை
செலுத்தினாள். தமக்கு முன்னர் அங்கு வந்து ஆடிய மூவரது அசைவுகளுக்கும் அசையாத
உள்ளத்தின் உறுதியை வியந்தாள். இவனுடன் கூடுவதுதான், தான் இதுவரை செய்த
பாவங்களுக்கெல்லாம் சித்தம் என்று சிந்தித்தாள். உண்மையான காதலைக் காற்றோடு
கலைத்து தூதனுப்பினாள்.
மேனகா.....
சுவாமி.....
இன்னுமா சுவாமி........
என்றென்றும் சுவாமிதான்
நீங்கள்.............
அதை எப்போதோ
இழந்துவிட்டேன்...இல்லையில்லை நீ அதைப் பெற்றுக்கொண்டாய்.....
....எனக்கு முன்னர் வந்தவர்களிடம்
நீங்கள் உளம் செலுத்தவில்லையே ஏன்....
யாரவர்கள்........
தெரியாதா.........
உண்மையில் தெரியாது........நான்
பல்லாண்டுகாலம் தாண்டி கண்விழித்தபோது, எழிலார்ந்து என்முன் நீ
நின்றுகொண்டிருந்தாய்......நான் சிவனைக் கண்ட காட்சியைவிடவும் எனக்கு
நினைவிருப்பது நீ அன்று நின்றிருந்த கோலம்தான். கண்மணி...எங்கிருந்தடி கிடைத்தது
இந்த எழில் உனக்கு...என் கண்கள் தன் பிறவிப்பயனை அன்று
அடைந்துவிட்டன....சர்வலெட்சணங்களும் பொருந்திய இளமங்கை ஒருத்தி, தன்னோக்கி
இழுக்கும் எண்ணம் கொண்டு, ஓர் ஆடவனின் முன் நின்று
அனுபவிக்க அனுமதிப்பதைவிடவும் வேறென்ன இன்பம் உண்டு உலகில்...சொல்...
...அது எனக்குக் கிடைத்த பேறு
சுவாமி...இதோ இந்த சகுந்தலா...
..நம் செல்வக்கண்மணி.....
.........இறையின்பமும் இதற்கு
ஈடில்லையா.....
..இல்லையடி....
மெல்ல வெள்ளலைகள் சலசலக்கும் அந்த
நதிக்கரையைத் தாண்டி நந்தவனத்துக்குள் நடந்தார்கள் இருவரும்.
என்ன சொன்னீர்கள்,
இறையின்பமும் இதற்கு ஈடில்லை என்றா....
...ஆம்...
..உலகம் ஒப்புமா....
..ஆ..உலகம்...எதைத்தான் அது ஒரு
சேர ஒப்பியிருக்கிறது...
பெண்ணின்பத்தை துறப்பதுதான் பேறு
என்றல்லவா செப்புகிறது சாத்திரம்....
...அதில் இல்லறம் அடங்காதடி
பெண்ணே....
..ஆனால் இதையும் சேர்த்துத்தானே
எழுதியிருக்கிறார்கள்...
...முழுக்கத் தெரியாத
முட்டாள்கள்.....வாத்தியத்தின் இருபக்கமும் அதற்கான ஒலியை எழுப்பினால்தானே தாளமும்
இசையும்.....அது ஒழுங்காக வாய்க்காதவர்கள் உளறியது அது.....சரி விடு எதற்கிந்த
விவாதம்....
நீங்கள் சொல்லுங்கள்.....
மேனகா...பல்லூழிக்காலம் தவம்
செய்தவன் நான்... எண்ணறியா வரங்கள் கொண்டவன்...இறைவனையே நேரில் கண்டவன்..இது
யாதும் தரும் இன்பங்களைவிட உயர்ந்தது நீ செய்யும் காதல் என்பேன்...
...உண்மையாகவா.....
..இதில் ஐயமென்ன உனக்கு....அதோ
பார் நம் காதலின் சாட்சி.....
..எனக்கு இப்போதெல்லாம் மீண்டும்
தவம் செய்யக் கிளம்பிவிடுவீர்களோ என்று அச்சமாக இருக்கிறது அவ்வப்போது.....
மாமுனி சிறிய நடுக்கத்துக்கு
உள்ளானான். மேனகாவுடனான இன்ப வாழ்வில் முதன்முறை இப்படி மொழிகிறாள் அவள். அன்று
அடவிக்குள் ஆடியபோது அவள்மீது அவளுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லாமல் போனதின்
மூலங்களை ஆராயத்தொடங்கினார். வாத்தியத்தின் ஒருபக்கம், மந்தமோ, உச்சமோ தாளத்துடன் ஒட்டாமல்
தப்புவதாக நினைத்தான். இருபக்க இன்பத்தில் பெரும்பக்கம் ஒன்றில் கீறல்
விழுந்துவிட்டால், அது முழுமையடைவதற்கான வாய்ப்பு முற்றாக இல்லை என்பது
அவனுக்குத் தெரியும். சிந்தனைகள் விரிந்தபோது, உரசிக்கொண்டு நடந்த மேனகாவின்
தீண்டலை தன்னுடல் முழுதாக உணரவில்லை என்பதை அறிந்தான்.
அதிகாலையில் சகுந்தலாவை தோள்மேல்
சாற்றிக்கொண்டு விண் நோக்கி நடந்தாள் மேனகா.
தான் படைத்த அந்த
படடணத்தைப் பிரமிப்போடு பார்த்துக்கொண்டு நின்றான் மாமுனி. விண்ணுளோர் வியந்து வினவியதன்
அடிப்படையில் படைப்பைப் பாதியிலேயே நிறுத்தினான். கொஞ்சம் இறங்கிப்பார்த்தான்.
திரிசங்குத் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறான் ஆகாயத்தில். முனிவனும்
தான்.
செல்வியின்செல்வன் . 12.08.2020