உலகின் அசைவையும் அமைதியையும் தன் திரிசூலத்தால்
திருப்பும், முப்பந்தல் இசக்கியம்மனின் தாமரை மலர்தாங்கும் தங்கத்திருவடிகளை
சிந்திக்கிறேன்.
அவனருளாலே – சிறுகதை
ஓட்டமும் நடையுமாகவும், அவ்வப்போது கைக்கடிகாரத்தில் மணியைப்
பார்ப்பதுமாகப் பேருந்து நிலையத்தை நோக்கி
வந்துகொண்டிருந்தேன். இன்றைக்கென்னவோ அது வேகமாக சுற்றுவது மாதிரி தெரிந்தது
எனக்கு. தொலைவில் வரும்போதே, பேருந்துநிலையத்துக்குள் வண்டி தெரிகிறதா என்று
எட்டிப்பார்த்துக்கொண்டே ஓடினேன். அந்த நகரப்பேருந்தை அதன் பின்பக்கத்தை வைத்தே
அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். ஒன்பதுமணிதான் அதன் நேரம். ஆனால் ஒன்றும் அப்படி
கட்டாயக்கணக்குக் கிடையாது. அன்று வரும் ஓட்டுனர் நடத்துனரின் குடும்பப்பாசம்
பொறுத்து அதன் நேரம் தீர்மாணிக்கப்படுவதுதான் அதிகம் நடந்திருக்கிறது. ஏற்கனவே
ஐந்துநிமிடம் அதிகமாகியிருந்தது. இந்த நேரத்துக்கு அந்த பேருந்து, நிலையத்துக்கே
வராமல் இருந்த காலங்கள் கூட உண்டு.
ஓடிப்போய் நின்ற வேகத்தில், ஒன்னாம் எண் கடைக்காரரிடம் ‘மன்னர்நகர்
கடைசி வண்டி போயிருச்சா அண்ணன்’. ஓடிவந்ததால்
ஏற்பட்ட மூச்சிறைப்பில் சொற்கள் அரைகுறையாகவும் தள்ளித்தள்ளியும் விழுந்தன.
ஆனாலும் புரிந்துகொண்டவர் போல ‘போயிருக்கும்’, கடிகாரத்தை ஒருமுறை
பார்த்துக்கொண்டே சொன்னார். எந்த வண்டியைக்
கேட்டாலும் இப்படித்தான் சொல்வார் போல இருந்தது அவரது அலட்சியப்பதில். என்
ஊர்ப்பெயரைச் சொல்லி அவரிடம் வழி கேட்டிருந்தால் இன்னும் விவரமாக சொல்லியிருப்பார்.
அவருக்கு என் ஊரில்தான் பெண்ணெடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் திருப்பி முகவரி
விசாரிக்கும்போது, சொல்லக்கூடிய அளவுக்கு ஏதும் இல்லாத ஏழைக்குடும்பம் என்பதால்,
சொல்லாமல் விட்டுவிட்டு, அவரது பதிலில் நம்பிக்கையில்லாமல் அங்கும் இங்கும்
அலைந்துகொண்டு இருந்தேன். ஒவ்வொரு வண்டியும் நிலையத்துக்குள் நுழையும்போது, மனது
அவசரப்பட்டு அதன் ஊர்ப்பலகையைப் பார்த்து, ஏமாற்றத்தை தனக்குத்தானே
ஏற்படுத்திக்கொண்டது. வண்டி சென்றதோ இல்லையோ, ஆனால் இனிமேல் வருவதற்கு
வாய்ப்பில்லை எனுமளவுக்கு நேரம் கடந்தபின்பு, திரும்பிச்செல்லும் முடிவுக்கு
வந்தேன் நான். பேருந்துநிலையத்தை விட்டு வெளியேறும்போது, உள்ளே நுழைந்த
நாகர்கோவில் வண்டி ஒன்றில், பின்பக்கம் பலகை இல்லாததால், ஓடிச்சென்று முன்பக்கம் எட்டிப்பார்த்து, வெறுமையில் திரும்பினேன். மனது
கனத்துப்போய் இருந்ததற்கு காரணம் உண்டு. வெளியே செல்லும் வழியில், பார்த்தவுடன்
கைகூப்பச்செய்யும் அளவுக்குக் கம்பீரமாக
ஒரு தேவர் சிலை உண்டு. இல்லாவிட்டாலும் வணங்கும் வழக்கமும் எனக்கு உண்டு. சுற்றிப்போடப்பட்டிருந்த
கம்பிவேலி அந்த கம்பீரத்தைக் கொஞ்சம் குறைத்திருந்தது.
இசக்கியம்மன் ஆலயம் ஒன்று எதிர்த்தார்போலே இருக்கிறது. உலகம்
முழுவதையும் அடக்கி ஆண்டும், எதுவுமே தெரியாத சின்னக்குழந்தை போல புன்னகை
புரியும், இசக்கியம்மனும், அருகிலேயே அதற்கு முரணாக, இந்தா வெட்டிவிடுவேன் என்று
அரிவாளைத் தூக்கிக்கொண்டு நிற்கும் சுடலைமாடசாமியும் அங்கே உறைகிறார்கள். ஏதும்
வேண்டும் பழக்கம் எனக்கு இல்லையாததலால், அருகிலிருந்த தொலைபேசிச்சாவடிக்குள்
நுழைந்தேன். வீட்டில் தொலைதொடர்பு வசதி கிடையாது. பக்கத்து சித்தப்பா வீட்டுக்கு
அழைத்தேன். சித்திதான் எடுத்தார்கள். ‘வணக்கம் .. யாரு பேசுறது?’. சித்தி
தனித்தமிழ் பேசுவாள் . அவசரத்துக்குக் கூட அடுத்த மொழியைப் பேச்சுவழக்கில்
கலக்கும் பழக்கும் அவளுக்குக் கிடையாது. சித்தப்பாவைக் கட்டிக்கொண்ட பின்புதான்
இந்த பழக்கம் வந்தது. அதற்குக்காரணம்
அப்பாதான். சித்தப்பா எடுத்தால் நேரடியாகத் தன் பெயரையே சொல்வார்கள். சித்திக்கு
அந்த வழக்கம் இல்லை. யாரென்று தெரிந்துகொண்ட பின்புதான், தன் பெயரைச்சொல்லி நலம்
விசாரிக்கத் தொடங்குவதோ, அவர்கள் வீட்டிலில்லை என்று தொடர்பை அறுப்பதோ நடக்கும்.
சித்தியைப் பற்றி உங்களிடம் சொல்ல எனக்கு நிறைய இருக்கிறது.
எங்கள் ஊரில் திருமணமாகாத ஒவ்வொரு இளையனும், இப்படி ஒரு மனைவி தனக்கு வந்தால்
நலமாக இருக்குமென்று நினைக்குமளவுக்கு, திருமணமான பெரிசுகள் கூட, ‘நமக்கு இப்படி வாய்க்காம போச்சே’ என்று
வாய்பிளக்க வைக்கும் அளவுக்கு, யாரையும் பொறாமைப்பட வைக்கும் குணம் சித்திக்கு. சித்திக்கு உடன்பிறந்த பெண்பிள்ளைகள்
இருந்திருந்தால், எங்கள் ஊர் இளவட்டங்கள், சித்தி ஊரில் அதிகம்
திரிந்திருப்பார்கள். பேசாமலும் இருக்கமாட்டாள், அதிகம் பேசவும் மாட்டாள், அளவு வைத்துதான் பேசுவதும்
சிரிப்பதும். காலையிலேயே எழுந்து சாணம் எடுத்துவந்து, கரைத்து, தூர்த்து தொளித்து
என்று கதிரவனை வரவேற்கும் வழக்கம் உண்டு அவளுக்கு. நல்ல கோலம் போடுவாள். அட்டில்
தொழிலில், வன்மை அதிகம். தெருவே மணக்கும் சித்தியின் சமையல். வீட்டில் பெண்கள்
இல்லையென்றால், அதை காலையிலேயே அடுத்தவீட்டில் சொல்லி, அவர்களுக்கும் சேர்த்து சமைக்கச்செய்து,
அங்கே சென்று சாப்பிடும் பழக்கம் உண்டு எங்கள் ஊர் ஆண்களுக்கு. சிலசமயம்
மனைவிமார்களே சொல்லிவிட்டு போய்விடுவார்கள். ‘பேச்சித்தா அக்கா கிட்ட
சொல்லிருக்கேன். சுந்தர் வீட்டுல இருந்தா கொண்டுவந்து தருவான், இல்லன்னா நீங்க ஒரு
எட்டு போயி சாப்பிட்டிட்டு வந்துருங்க என்ன?’. அந்த வாய்ப்பு ஆண்களுக்குக்
கிடைத்தால் எங்கள் தெரு முழுக்க தேர்வு செய்யும் வீடு சித்தப்பா வீடுதான்.
‘தாயீ...சேத்து பொங்கிரு என்னம்மா?’. ‘சரின்னேன்’ ன சொல்லுக்கு மறுசொல் சித்திக்கு
சொல்லத்தெரியாது. சாப்பிட்டு முடிச்ச கையோட.... ‘இவா தினசரி சந்தைக்கு போனா
நல்லாத்தான் இருக்கும்’ என்று சொல்வார்கள். ‘மதினி வரட்டும் சொல்லிவைக்கிறேன்’ னு
மிரட்டுவாள் சித்தி.... ‘சொல்லிராத ஆத்தா... அப்பொறம் அவா எளவுல நிக்க முடியாது,
பத்ரகாளி எப்படி இருப்பான்னு பாக்கணும்னு ஆசன்னா சொல்லு..’. இன்றுவரை வீட்டுக்கு
என்னென்ன தேவை என்று சித்தப்பாவுக்குத் தெரியாது. ஒருநாளாவது, இது இல்லை, அது
இல்லை, வாங்கி வாருங்கள் என்று அவரை கடைக்கு அனுப்பும் வழக்கம் சித்திக்கு இல்லை. தானே எல்லாமும் செய்துவிடுவாள். பரிமேழலகன் சித்தியைப்
பார்த்திருந்தால், தற்காத்து தற்கொண்டான் பேணி என்ற குறளுக்கு அமுதவல்லி என்று ஒரு
சொல்லில் பொருள் எழுதிவைத்துவிட்டு போயிருப்பான். சுழன்று சுழன்று வேலை செய்வாள்.
மாலை நேரம் தன்வயதொத்த பெண்களிடம் கதைபேசுவதும் உண்டு. எல்லோரும் சித்தி வீட்டு
முத்தத்துக்கு வருவார்கள். பிறர் சொல்லவருவதை அப்படியே புரிந்துகொள்ளும் அறிவு
சித்திக்கு இருந்தது. யாரையும் குறைசொல்லும் விதத்தில் பேசமாட்டாள். அவரவர்க்கு
தகுந்தாற்போலும், அதனூடே நல்லதுகெட்டதையும் அழகாகவும் சொல்லிவிடுவாள். ஊரே வியக்கும்
சித்தியைக் குறை சொல்லும் கூட்டமும் இல்லாமல் இல்லை. ‘அதென்னடே வாழ்க்க....நீ வேணா
கேட்டுப்பாறேன்...அந்த புள்ள சந்தோஷமா இதெல்லாம் செய்யுதான்னு......இருக்காது.’. எனக்கும் அப்படி ஓர் எண்ணம் உண்டு. ஆனால்
அதைக்கண்டுபிடிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பெரும்பாலான பெண்களுக்குத் தன்னாசை துறந்து, மனைத்தக்க மாண்புடையளகாக
நடப்பது, ஒரு இயல்பான குணமாகவே இருக்கிறது. தியாகம் இவர்களுக்குப் பெரிதாகத்
தெரிவதில்லை.
‘நான் நரசு பேசுறன் சித்தி’ ‘சொல்லும்மா...இவ்வளவு நேரத்துக்கு
எங்கேருந்து பேசுற?’. ‘கடைசி வண்டிய விட்டுட்டேன் சித்தி, அம்மாகிட்ட
சொல்லிறேன்...நான் இன்னைக்கு வீட்டுக்கு வரலைன்னு’ சிலர் மீதான பாசம்,
வயதொப்பீட்டில் மிகக்கீழே இருந்தாலும், ஒருமையில் பேசும் உரிமையைத் தரும். ‘எங்க
தங்கப்போற?, காலைல வந்திருவியா இல்ல சாய்ங்காலம்தான் வருவியா?’. இல்ல சித்தி இனிமே
நாளைக்கு சாயங்காலம் தான் வருவேன், இங்க வேல பாக்குற எடத்துலேயே தூங்கிக்கிறேன்...அம்மாட்ட
சொல்லிருங்க என்ன’. ‘சரிம்மா சொல்லிர்றேன்’ நான் தொலைபேசியின் ஒலிவாங்கியைக் காதை
விட்டு விலக்கும்போது சித்தி ஏதொ கேட்பது போல இருந்தது. அநேகமாக இரவு உணவு
சாப்பிட்டது குறித்ததாக இருக்கும்.. என் வீடு இருக்கும் தெரு முழுக்க, வெளியுலகத்
தொடர்பு சித்தப்பா வீட்டின் வழிதான் நடக்கும். ‘அவன் இருந்தான்னா, என்ன ஏதுன்னே
விசாரிக்கவும் மாட்டான், ஒடனே சொல்லிவிடவும் மாட்டான், அந்த புள்ள இருந்ததுன்னா
நல்ல விசாரிச்சு, ஏதாவது ஒரு சின்னப்பயல்ட்ட சொல்லிவிட்டுரும் பாத்துக்கோ.’ இப்படி
கதைப்பார்கள் கிழவிகள் எங்கள் தெருவில். அது உண்மைதான். வெளியூரில் இருக்கும்
அவர்களது வாரிசுகள் அழைத்தால், சித்தி உடனே கூப்பிட்டு சொல்லிவிடுவார்கள். இவர்களை
அழைத்து பேசவும் வைப்பார்கள். தகவலாக இருந்தாலும் முழுக்கவும் விசாரித்து
சொல்வார்கள். என்னிடம் தாங்கும் இடம் குறித்தும், வீடு திரும்பும் நேரம்
குறித்தும் சித்தி விசாரித்தது அந்த பழக்கத்தால்தான். சித்தப்பாவுக்கு அது கிடையாது. அவரே சிலவற்றை விசாரித்துவிட்டு,
‘சொல்லிடுறேன்’ என்று வைத்துவிடுவார்.
மெல்ல நடந்துவந்தேன். மனத்தின் கொதிப்போ, ஓடிவந்த களைப்போ,
வண்டியை தவறவிட்ட விரக்தியோ, உடல் சூடாகவும், கழுத்துப்பக்கம் அதிகமாக
வியர்த்துக்கொண்டும் வந்தது. மெனக்கிடாமல் மெல்ல நடந்தேன். மேல்பக்கம் கடைகளுக்கு
இடையில் செல்லும் சந்திலிருந்து காற்று வந்து மேனியை தழுவியது. ஒருமுறை தலையைத்
தூக்கிச் சந்தைப் பார்த்தேன். இருட்டாக இருந்தது. ஏறக்குறைய எல்லாக்கடைகளும்
அடைக்கப்பட்டுவிட்டன. சில கடைகளில் சுத்தம் செய்யும் வேலையும், சிலவற்றில் கல்லா
எண்ணப்படும் வேலையும் நடந்துகொண்டிருந்தது. எதிரே இருட்டு பெருங்குகை போல
இருந்தது. அந்தப் பெருங்குகைக்கு இட்டுச் செல்லும் வழிமாதிரி கிடந்த சாலை,
நீளப்போக்கில் அகலம் குறைந்து குறைந்து பின்னர் காணாமல் போனது அவ்விருட்டுக்குள்.
குகையின் முடிவை எட்டிவிட்டதோ என்னமோ. ஒற்றையும் இரட்டையுமாய்,
மின்மினிப்பூச்சிகள் அந்தக் குகைக்குள் இருந்து கிளம்பி என்னை நோக்கி
வருவதுபோலவும், என்னருகே மோதுவதுபோல வந்து, சற்றே திருப்பிக்கொண்டு சாலையில்
பறப்பது போலவும் தெரிந்தது. வாகனங்கள் சீரான இடைவெளியில் ஒவ்வொன்றாய் கடந்தன.
இந்நேரம் அம்மாவிடம் சித்தி சொல்லியிருப்பார்கள். ‘மணி வீட்டுல
தங்க சொல்ல வேண்டியதுதான, போமாட்டான’. அம்மா இப்படி சொல்லியிருக்கக் கூடும். இந்த
மணி வேறு யாருமல்ல. எனக்கு தாய்மாமா. அத்தையும் பாசமானவள்தான். வந்தால், போனால்
எட்டிப்பார்ப்பதோடு சரி, தங்குவதெல்லாம் சரிவராது என்பதே என் எண்ணமாக
இருந்திருக்கிறது. மகன் வீட்டுக்கு
வரவில்லை என்பது எந்த அம்மாவுக்கும்
வருத்தமாக இருக்கும். என் அம்மா அப்படியில்லை. அதுவும் நாளை நான் செல்வதற்கு
திட்டமிட்டிருக்கும் இடத்துக்கு, செல்லமுடியாது என்பதில் அம்மா இன்னும்
மகிழ்ந்திருப்பாள். அண்மைக்காலமாக எனது நடைமுறைகளில் அம்மாவுக்கு அதிகம் குறைபாடு.
அப்பாதான் ‘சும்மா சத்தம் போடாத.. அதெல்லாம் நல்லதுதான்’ என்று அதட்டி
வைப்பார்கள். அது என் நட்புவட்டத்துக்கும் தெரிந்துபோகும் நிகழ்வொன்று போனவாரம்
தான் நடந்திருந்தது. என்னைத்தேடிக்கொண்டு வந்த தோழன் ஒருவரிடம் ‘இங்க பாரு..என்கிட்ட சொன்னதோட
விட்டிரு, நான் சொல்லிக்கிருவேன், அவன பார்த்தா இத சொல்லப்பிடாது என்ன?’ என்று
கொஞ்சம் கோபமாக பேசி அனுப்பியிருக்கிறார்கள். அதனால் அவன் என்னிடம் சொல்லவே இல்லை.
ஆனாலும் எனக்கு தெரிந்துபோனது. அதுதான் அவனருளாலே என்ற சொல்மூலம். ‘அம்மா
நாளைக்கு, வடக்கூர் கோயில் ல திருவாசகம் ஓதப்போறோம், காலையில போயிட்டு
சாயங்காலம்தான் வருவேன்’ சொன்னபோது அம்மா ஆச்சரியப்பட்டார்கள். ‘யாருடே ஒனக்கு
இதையெல்லாம் சொல்லுதா?’, சொன்னா கேக்கவா போற, அப்படி கேக்குற புள்ளையையா நான்
பெத்துருக்கேன், எல்லாம் என் தலவிதி, இதுக்கு ஆதரவு வேற பெருகுது, அய்யாவ ஒன்னும் சொல்லதுக்கு
ஆவல’. அப்பா மீதும் குறைபட்டுக்கொண்டார்கள். அம்மா போகவேண்டாம் என்று கண்டிப்பாக
சொன்னால், எங்கே செல்வதானாலும் நிறுத்திவிடும் வழக்கம் எனக்கு உண்டு. மீறிப்போனால்
சென்ற செயல் திறம்பட நடவாத நாட்கள் பல. அம்மாவின் கற்பின் சக்தி மீது எனக்கு
ஆச்சரியம். ‘எல்லாரும் சினிமா பாட்டு பாடிகிட்டு திரியிறான், நம்மாளு என்னான்னா
திருவாசகம் ன்றான், தேவாரம் ன்றான், கம்பனுக்கு விழா, சேக்கிழாருக்கு விழா ன்னு
புறப்பட்டு போயிடுறான்’ என்ன செய்யுறது அமுதா, தேறிருவானா?’. சித்தி நம்ம கட்சி.
‘பெரும படுவேளா, சும்மா பிதற்றிக்கிட்டு, எவம் படிக்கிறான் இந்த காலத்துல, ஒனக்கு
தெரியாதுக்க்கா, இதையெல்லாம் தெரியிறவன் வாழ்க்கைய எப்படி நடத்தணும்னு
புரிஞ்சிப்பான், அதெல்லாம் வருங்காலம் சொல்லும், இப்படி ஒரு புள்ளைய பெத்தொம்னு நீ
பெரும படத்தான் போற பாரேன்’ சித்தி என்னவோ மிகைப்படுத்தி பேசுவது போல இருக்கும்
எனக்கு.
எனக்கு நடந்து செல்லவே விருப்பம் இல்லாததுபோல, மெல்ல நடந்தேன்.
ஓடிவந்த வேகத்தில் உடனே நிற்கமுடியாமல், இன்னும் கொஞ்சம் உடலை இழுக்கும் விசையின்
செயல்போலத்தான் நடந்தேன் நான். அப்படியே சாலையைப் பார்த்துக்கொண்டே
நின்றுவிடவேண்டும் போல இருந்தது. தங்கும் அறைக்கு இன்னும் கொஞ்ச தொலைவு
இருக்கிறது. சீக்கிரம் போகவேண்டும் என்று எவ்வளவு சொல்லியும் கேட்காத இசக்கியண்ணன்
மீதும், இன்னும் யார் மீதெல்லாமோ, அம்மா மீது கூட, கோபம் கோபமாக வருவதும், அவனருளாலே
என்ற சொல்மூலம் அதை அடக்குவதுமாக, உள்ளம் கொதித்து கொதித்து அடங்கியது. திருவாசகத்தின்
பல பாடல்களின் சில வரிகள் மட்டும் நினைவுக்கு வருவதும் செல்வதுமாய் இருந்தன. மாய
வாழ்க்கையை மெய்யென்றெண்ணி மதித்திடா வகை நல்கினாய், வேயதொளுமை பங்கன் எங்கள்
திருப்பெருந்துறை மேவினாய் என்ற வரிகள் நினைவுக்கு வந்தபோது, யாருமில்லாத அந்த
இருண்ட சாலையில், அங்கிருந்து மெல்லிய நிலவொளியில் இலிங்கம் போலவே தெரியும் அந்த
மலையை நோக்கி, சத்தம் போட்டு பாடவேண்டும் போல இருந்தது. அதற்குள் அவனருளாலே
அவன்தாள் வணங்கி, சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுவதும் ஓய
உரைப்பன் யான் என்ற வரிகள் வந்து சூழ்ந்துகொண்டன. அப்படியே அதை பின்பற்றி சென்றது
மனது. என்ன வரிகள் இவை?. சிவபுராணம் ஓதினால், ஊழ் அத்தனையும் ஒய்ந்துவிடுமா என்றே
கேள்வியை விட, சிவபுராணம் ஓதுவதற்கே சிவனருள் தேவை என்ற பதத்தின் மீதேறி நின்ற
வினா, என்னை சிந்திக்க வைத்ததது.
அப்படியானால் தன்னடியார்களைக்கூட அவன்தான் தேர்ந்தேடுப்பானா?, நாமாக இறைவனை
சிந்திக்க முடியாதா?, கைலாயத்தில் கையில் கம்பும் வேலுமாய் பூதகணங்கள் நிற்பது
போலவும், நந்தியம்பெருமான் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு, சிலரை பணிக்கு
சேர்ப்பதும், சிலரை விலக்குவதைபோலவும் ஒரு தோற்றம் கண்ணுக்குள் வந்து சென்றது.
நானும் அந்த வரிசையில் கிடா மீசையும், தொந்தி வயிருமாக, கிழிந்த குட்டைப்பாவாடைக்
கட்டிக்கொண்டு நிற்கிறேன். என் நேரம் வரப்போகிறது, சேர்ப்பாரோ, விலக்குவாரோ
தெரியவில்லை.
தொடர்ந்து சிந்திக்க பயம் கொண்டவனாக ஆனேன். மிகச்சிறிய
கனத்தில், அம்மைக்கும் அப்பனுக்கும் அருகில் இருப்பதைப்போலவும், அம்மை தன் மடியில்
அமர்த்தி, அழகிய வளைக்கரங்களால் என்னை அணைத்திருப்பதுபோலவும் தெரிந்தது. இரண்டாவது
கண்ணைப் பிடுங்கப்போன திண்ணனின் கரங்களை பற்றித் தடுத்தாட்கொண்ட அதே பொற்கரம். அண்டசராசரம்
முழுவதும் அன்னையின் கைவிரல் மோதிரம் என்று ஔவை சொல்லியிருக்கிறாளே, அந்த
மோதிரத்தை எங்கே?. கையை இழுத்து பார்க்க அவா பருகிய சனத்தைக் கெடுத்தது ஒரு தானியின்
ஒலி. மிக அருகில் வந்து ‘அண்ணே......நரசிம்மண்ணே’ பரிச்சயமான குரல். எங்கோ
உயரத்தில் பறந்துகொண்டிருந்த வானூர்தி ஒன்று, திடீரென எந்தப்பிடியும் கிட்டாமல்
வேகமாக தரையில் வந்து வீழ்வதைப்போல உணர்ந்தேன் நான்.
கலியமூர்த்தி எனக்கு நல்ல பழக்கம். ‘ஏறுங்கண்ணே’. என்ன
செய்கிறேன் என்று தெரியாமலே தானியின் பின்பக்க இருக்கைக்குள் என்னை திணித்தேன்.
ஒருமுறை திரும்பிப்பார்த்து, சாலையில் வண்டி ஏதும் இல்லாததால் சாவகாசமாகத்
திருப்பினான் மூர்த்தி. ‘வூட்டுக்கு பேசுனன்....வள்ளிப்பாண்டியன்
இல்ல....நாச்சியார்தான் பேசுனாவ...நீங்க இங்கதான் இருக்கியன்னும், வண்டிய
வுட்டுட்டீக ன்னும், கெடச்சா கூட்டிட்டு வா ன்னும் சொன்னாக.. நான் கோட்டையடி
பக்கம் வரைக்கும் போயிட்டேன்....சரி பேச்சுத்தொனைக்கு ஆகுமென்னு திரும்பி வந்து
தேடுனேன். கெடச்சிட்டியோ....சமுக முக்க தாண்டுன உடனே ஒரு பாலம் வரும்
பாத்திருக்கேளா....அதுல ஒரு முனி உண்டுன்னு சொல்லிக்கிடுதாவ’. எனக்கு மூர்த்தியின்
பேச்சில் மனம் இலயிக்கவில்லை. மீண்டும் அவனருளாலே என்ற சொல்மூலம் நினைவுக்கு
வந்தது. பூதகணத்தின் வரிசையில் கலியமூர்த்தியும் நின்ற மாதிரி இப்போது தோன்றியது.
ஆனாலும் சிந்தனை அதைத்தாண்டி போகவில்லை. மூர்த்தி ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான்.
சமுகரெங்கபுரம் பாலத்தைத் தாண்டும்போது மட்டும் ஏனோ அமைதிகாத்தான். அதுவரை
பேசிக்கொண்டே வந்தவன் சட்டென அமைதியான தருணம், எனக்குள்ளே கூட ஒரு அச்சத்தை
உருவாக்கியது. வெளியே இருட்டுக்குள் எட்டிப்பார்த்தேன். வளைவான அச்சாலையின்
கரையோரம் இடுப்பில் சிவப்புத்துண்டுடன் தலைசிலுப்பிகொண்டு நிற்கும் ஒரு வடலி,
தூரமாகி, மெல்ல அருகி, பின்னே சென்றது, ஏதொ போல இருந்தது.
காஞ்சியின் வரமே, காமாட்சியின் அவதாரமே.....ஒலிபெருக்கிகள்
அலற, அடித்துச் செல்லும் ஆற்றின் வெள்ளத்தில் அசைந்து வரும் குச்சி போல,
சிறிய காவித்துணி கட்டிய இரண்டு குச்சிகள்
அந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவில் மெல்ல நகர்வது தெரிந்தது. கூட்ட நெரிசலில்
அங்கும் இங்கும் நகராமல் இருக்க, அருகிலிருந்த கொடிக்கம்பத்தைப்
பிடித்துக்கொண்டேன் நான். அந்த கம்பத்தின் கொடியில் அண்ணா, இறைவன் இங்கேதான் இருக்கிறான் என்று,
அம்பாள் சன்னதியின் கோபுர உச்சியைக் காட்டிக்கொண்டு இருப்பதைப் போல தெரிந்தது எனக்கு. பாலபெரியவர் வடிவுடைநாயகி சன்னதியின் கோபுர
உச்சிக்கு வந்து சேர, எனக்குப் பின்புறம் இருந்த, சிறிய திண்டில் இருந்த பாடல்குழு
ஒன்று, சிவபெருமானின் புகழைப் பரவ, வேதகோசங்கள் முழங்க, திருக்குடமுழுக்கு
நடைபெற்றது. நேற்று இரவு பேருந்தை தவறவிட்ட பிறகு, நான் தவித்த தவிப்பு இறைவன்
எனக்கு வைத்த சோதனையாக தெரிந்தது. தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும்
இறைவா போற்றி, நம பார்வதி பதயே....அரகர மகாதேவா... என்று எங்கும் ஒலிகள் கிளம்ப,
நகரமே விழாக்கோலம் பூண்டு நின்ற அழகை அனுபவித்த மனது, அடைந்த ஆனந்தத்தை எழுத்தில்
எழுத என்னால் இயலாது. கருனைக்கடவுளே கலியமூர்த்தி
வடிவில் வந்தமாதிரி எனக்கொரு எண்ணம். சுற்றி ஒலித்த அத்தனை ஒலிகளும், அவனருளாலே
என்ற திருவாசகச்சொல் மூலத்தின் சுழியில் அடங்குவது போல இருந்தது.
இது நடந்து பத்துவருடம் இருக்கும். அம்மா ஒரு நாள் வண்டியின்
பின்னால் அமர்ந்திருக்கும்போது, உசிரே போகுதே....உசிரே போகுதே....என்று
முணுமுணுத்துக்கொண்டே வந்தேன். ‘ஏண்டா ஏதாவது நல்ல சகுனமான பாடலாக பாடக்கூடாதா?’
என்றார்கள். வரும் சனிக்கிழமை நெல்லையப்பர்
கோயிலில் உழவாரப்பணி என்று திருநாவுக்கரசர் சிவப்பணிமன்றத்திலிருந்து சொன்னதாகச்
சொன்னார்கள். அவர்கள் முன்னாலேயே வண்டியை நிறுத்திவிட்டு, இராமக்குட்டி அண்ணனை
அலைபேசியில் அழைத்து, ‘வேலை அதிகமா இருக்கு அண்ணன், வரமுடியாது இப்போ’. அம்மா
சிரித்தார்கள். அதே சனிக்கிழமை
நாகர்கோவில் சுவாமி திரையரங்கில் புதுப்படம் ஒன்றுக்கு சீட்டு
வாங்கியாகிவிட்டது. படம் தொடங்க இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. அருகில்தான்
நாகராஜா ஆலயம். ஆனாலும் செல்லாமல், ஆலயத்தின் பிரமாண்டநுழைவாயில் முன் இருந்த
பெட்டிக்கடை பெஞ்சில் அமர்ந்து புகைபிடித்தேன். காற்று அதிகமாக இல்லாததால், சுருள்
சுருளாக புகை, மெல்ல என்னை விட்டு விலகியது. அதன் வடிவம் ஏனோ, சங்காகவும்,
சக்கரமாகவும், உடுக்கை, சூலம் போலவும் கண்ணுக்குத் தெரிந்தது. மனம் எதையும்
பெரிதாக எடுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை.
ஜான் சார் கூப்பிட்டார். ‘வணக்கம் இது நரசிம்மமூர்த்தி’
என்றேன். புகை கண்ணிலும் மூக்கிலும் நுழைந்து காந்தியது. ‘பவானில ஒரு வேல இருக்கு
சார், உங்களத்தான் போச்சொல்லனும்றார் எம்டி’ அவசரமாக இடைமறித்து ‘கூட யாரு சார்’.
‘நம்ம இசக்கிமுத்து வருவார், செவ்வாக்கிழம நம்ம கம்னி வண்டியிலேயே போயிராலாம்....’
நான் என்ன சொல்லவருகிறேன் என்று கேட்காமலே தொடர்பு துண்டிக்கப்பட்டது. போகலாம்,
கூடவே அடுத்தவாரம் நடக்கஇருக்கும் பேராச்சியம்மன் கோயில்கொடை நினைவுக்கு வந்தது.
‘அங்க யார்க்கனவே நெரிய பேரு இருக்கானுவோ, அதெல்லாம் சொல்லிட்டு வந்துரலாம்டே,
வா’. இசக்கியண்ணன் இப்படி சொன்னார்.
பவானி சுற்றுசூழல் அருமையாக இருந்தது. என் ஊர் மாதிரி
இல்லாமல், எங்கே பார்த்தாலும் மரியாதையாக பேசினார்கள் மக்கள். வெள்ளிக்கிழமை
வாக்கில் விடுமுறை கேட்கலாம் என்று நினைத்து, கேட்டும்விட்டேன். ‘ராம்குமார் வேற
லீவுல இருக்கான், இப்ப போகமுடியாது, ரெண்டுநாள் கழிச்சு வியாழக்கிழமை போங்களேன்’.
‘சார், நான் என்ன சொந்தக்காரங்கள பாக்குறதுக்கா போறேன், கோயில்கொட சார், அப்ப
போனாதான் உண்டு’. ‘நாட் பாசிபுள் மிஸ்டர் நரசிம்மன்’
எனக்கு விவரம் தெரிந்தபிறகு, நான் விடப்போகும் முதல்கொடை இது.
என்ன வேலை இருந்தாலும், போட்டுவிட்டு ஓடிவிடுவேன், அப்படி ஒரு சூழ்நிலை
அமைவதுபோலவே இருக்கும். இப்போது மனம் கனமாக இருந்தது. அம்மை எனக்கு அருளியவாறு
ஆர்பெறுவார் அச்சோவே பாடமுடியவில்லை. தொண்டை அடைத்துப்போய் இருந்தது. நான்
பகலிலும், இசக்கியண்ணன் இரவிலுமாக பணியமர்த்தப்பட்டதில், சங்கடத்தைப்
பகிரமுடியாமல் மனம் அதிகமாக சஞ்சலப்பட்டது. அவனருளாலே என்ற சொல்மூலம் அண்மைக்காலமாக எனக்கு அந்நியமாகிப்போனது.
செவ்வாய்க்கிழமை பகல்நேரம் மிக நீண்டதாகத் தெரிந்தது எனக்கு.
எவ்வளவு வேலை செய்து நேரம் தொலையவில்லை. சாப்பிடவும் மனசு வரவில்லை. எந்த
கற்பனைக்குள்ளும் மனது நிரந்தரமாக நிற்க மறுத்து, ஓடியாடியது. சுற்றிப்பார்க்க
வந்த ஜான் சார் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். ‘நரசிம்மன், நீங்க ஊருக்கு
போகலை?’. கோபமாக வந்தது எனக்கு. ‘நீங்கதான் போகமுடியாதுன்னு சொல்லிட்டீங்களே
சார்’. ‘ராம்குமார் நாளைக்கு வந்துருவேன்னு சொன்னாப்ல, ஒருநாள் தான
சமாளிச்சுக்கலாம், போச்சொல்லுங்கன்னு, எஸ்கிமுத்து கிட்ட சொன்னேனே, அவரு
சொல்லலியா, சரி நல்லாதா போச்சு, இன்னைக்கு ஒரு ஆடிட் இருக்கு, நீங்க இருந்தா
இன்னும் நல்லா இருக்கும்’, உள்ளத்தின் வேதனை புரியாமல், அதுபாட்டுக்கு பேசிவிட்டு
சென்றார்.
அவசரமாக அலைபேசியை உருவினேன் பைக்குள்ளிருந்து. ‘அண்ணன், ஜான்
சார் என்னிய ஊருக்குப் போலாமுன்னு சொன்னாரா?’. ‘ஆமா நீ போகலியா என்ன, நீ ஊருல
இருக்கன்னுதான் ஒனக்கு பேசவே இல்ல நான்’. ‘அடப்பாவிங்களா, ஏன் எங்கிட்ட சொல்லல?’.
கோபமாகப் பேசினேன் நான். ‘அவரு சொல்லிருப்பாருன்னு நெனச்சேன்’. ‘ச்ச...’. யாரை
குறைசொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை.
நான் நேரில் கேட்ட விடுமுறைக்கு ஜான்சார் என்னிடமே ஏன் பதில்
சொல்லவில்லை?. வரும்போதே இதுகுறித்து சொல்லியிருந்தும், அவர் சொன்னதை இசக்கியண்ணன்
ஏன் எனக்குச் சொல்லாமல் விட்டார்?. வீணே அழைத்து வீட்டுக்கதைகளைக் கொட்டும்
மனிதர், இரண்டுநாட்களாக ஏன் கூப்பிடவில்லை?. நானே கூட இன்னொருமுறை, ஜான்சாரிடமோ,
இசக்கியண்ணனிடமோ ஏன் கேட்கவில்லை?. ஏன் அமைதியாகிக்கொண்டேன்?. இராம்குமாரிடம்
எப்போது வருவீர்கள் என்று கூட ஒருமுறை விசாரித்திருக்கலாமே நான்?. ஏன் செய்யத்
தோன்றவில்லை?. கேள்விகளால் துளைத்துத் துளைத்துப் புண்ணாகியது நெஞ்சம். கணேசனை
அழைத்து ஒரு பெட்டி புகைக்குழல் வாங்கி வரச்சொன்னேன். கண்களை மூடிக்கொண்டேன். பேராச்சியம்மன் ஆலய
மண்டபத்துக்குள், விரிசடை வீசி அவள் ஆடுவதுபோல தெரிந்தது. அவனருளாலே அவன்தாள்
வணங்கி எனும் திருவாசக வரிகள் என்னை விட்டு விலகியது போல இருந்தது எனக்கு. அதற்கு
காரணம் நான் அறியாதது அல்ல.
தப்பேது நான் செய்யினும் நீ பொறுத்தல் வேண்டும், தலைவ நினைப்
பிரியாத நிலைமையும் வேண்டுவனே... எனும் திருவருட்பா வரிகள் என்னை உடுத்திக்கொண்டன.
அதைச் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
செல்வியின்செல்வன்