சர்வம் சக்திமயம்.
அந்த
ஆலயத்தின் கொடைவிழா நிறைவுபெற்று சில நாட்களாகிறது. இன்னும் கொட்டகை பந்தல்
பிரிக்கப்படவில்லை. தட்டுப்பந்தல் மட்டும்தான் பிரிக்கப்பட்டிருக்கிறது.
பந்தல்காரனுக்கு வேறு வாடகை உடனேயே இல்லையோ என்னமோ?. அலங்கார சீலைகள்
அவிழ்க்கப்பட்டு அங்கொன்றும், இங்கொன்றுமாய் கிடந்தது. சீலை குத்த பயன்படும்
காக்காமுள் தரையில் நிறைய கிடந்தது. ஆர்த்து நடக்கவேண்டும். காய்ந்த மாலைகள்,
பிளக்ஸ்பேனர்களுக்காக வைக்கப்பட்ட கம்புகள், சர்க்கஸ்காரர்களும்,
இராட்டினகாரர்களும் வெட்டிய குழிகள் என பெரிய திருவிழா நடந்ததற்கான அனைத்து
அடையாளங்களுடனும் இருந்தது ஆலய வளாகம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும், பொங்கலிட
வைக்கப்பட்ட கற்கள், அங்கங்கே ஆண்டவனுக்காக வெட்டப்பட்ட கிடாய்களின் இரத்தங்கள்,
கொரண்டிமுள் காட்டுக்குள் நடந்த கொடைவிழாவுக்கு அடையாளங்கள். பிளக்ஸ்பேனர்கள்
பலவீட்டின் பந்தல்மேலுமாய், சில வீடுகளில் கக்கூஸ் மறைவுமாய் பயன்படுத்தப்
பட்டிருந்தன. அமுதன் கொடைவிழாவுக்கு வந்திருக்க வேண்டும். வெளிமாநில வேலையினாலும்,
திடீரென பிளான்ட் டிரிப்பாகி போனதாலும் வரமுடியவில்லை. வந்தபோதாவது சாமி கும்பிட
வேண்டுமென்று நிற்கிறான். பெரிய கூட்டமில்லை. ஒரு குடும்பம் கொம்பு திருகிய
செம்புலிக்கிடாயைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறது. வ்சாரித்ததில்
ஆண்டான்குளம் என்று தெரிந்து கொண்டான். இன்னும் சிலபேர் அங்கொன்றும்
இங்கொன்றுமாய். கொடைவிழாவில் கிடைத்த பலி திருப்தியால், எல்லாவற்றையும் ஏகாந்தமாய்
பார்த்துக்கொண்டு நின்றார், ஒத்தப்பனை சுடலையாண்டவ்ர். பக்கத்திலேயே முண்டன்,
பேச்சி என துணைதெய்வங்கள். கல்தூணிலேயே செதுக்கப்பட்ட சிற்பம், உயிரோடு கண்ணை
உருட்டுவது போலிருக்கும். நெருங்கி கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தால், பயம்
வந்துவிடும் அளவுக்கு உயிர்த்துடிப்புள்ள சிலைகள். பூசாரி வருவதற்கு இன்னும்
அரைமணி நேரம் ஆகுமென்று அங்குள்ளோர் பேசிக்கொண்டதிலிருந்து தெரிந்து கொண்டான்.
வில்லுமேடையில் கொஞ்ச நேரம் உட்காரலாமென்று கழட்டி விட்டிருக்கும் செருப்பு
கண்ணில் படும் படியான இடம் பார்த்து உட்கார்ந்தான். சாமி மீது அவ்வளவு நம்பிக்கை...
கொடைக்கு வந்திருந்தால்......
சிலப்பதிகாரத்தில்
இளங்கோ வரைந்திருக்கும் காவேரிப்பூம்பட்டினத்தின் இந்திரவிழா தோற்றுப்போகும்.
அத்தனை சிறப்பு. தேவாதிதேவரெல்லாம் இரண்டு நாளைக்கு முன்னரே வடக்கு
விஜயநாராயணத்தில் ஆஜர். மாலை 3 மணிக்கு பால்குடம்.
இவனுக்கு தெரிந்து வேறெந்த பகுதியிலும் சுடலைசாமிக்கு இத்தனை பால்குடம்
எடுப்பதாகத் தெரியவில்லை. நூற்றுக்கணக்கில். ஏற்கனவே மன்னர்குலமென்று
பீற்றிக்கொள்ளும் மறவர் சமுதாயம் காட்டுகின்ற தோரணைக்கு அளவே இருக்காது.
இத்தனைக்கும் அரசு விழா. ஒரே குடும்பத்து ஆட்கள்தான் தக்கார். திமுக ஆட்சிக்கு
வந்தால் அண்ணன், அதிமுக ஆட்சிக்கு வந்தால் தம்பி. போனவருடம் உதயசூரியன் வரைந்த
வீட்டின் கதவில் இதை வருடம் இரட்டைஇலை இருக்கும். கட்சி மாறுவது பணக்காரர்களுக்கு
எளிது. ஏழைக்குத்தான் கஷ்டம். யானை, குதிரையுடன், தாரை தப்பட்டை முழங்க பால்குட
ஊர்வலம். யார் வீட்டு மாடியிலாவது நின்று பார்த்தால். கரிகால் பெருவளத்தான் வட
திசை நோக்கி படை திரட்டியது மாதிரி இருக்கும். அவர்களை மாதிரி வேட்டிசட்டை
அணிவதற்கு தனியாக படிக்கவேண்டும். அத்தனை வெள்ளையாக எந்த கடையில்தான்
விற்கிறார்களோ?. முப்பத்து முக்கோடி தேவர்களும் புடை சூழ பால்குட அணிவகுப்பு.
தசராமடம் திரும்பியவுடன் பால்குடம் எடுத்தவர்களுக்கு சாமிவந்து முன்னே கயிறு கட்டி
நிற்பவர்களை தள்ளிவிட்டு, ஆலயத்தை நோக்கி ஓட, அவரது மாமன் மச்சான்கள் குடத்தைப்
பிடித்துக்கொண்டே அவர்கள் பின்னால் பாய, ஒட்டுமொத்தக் கூட்டமும் ஓட ஆரம்பிக்க,
தப்பட்டைக்காரர்கள், ஓடவும் முடியாமல், அடிக்கவும் முடியாமல், பீடிக்கடைக்கு
ஒதுங்க என்று பல சுவாரஸ்யங்கள். சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னால்
தென்மண்டலத்தை கொடி கட்டி ஆண்ட பரம்பரை ஓட்டமும், நடையுமாக ஆலயம் செல்லும் அழகே அழகு.
அமுதன் ஆச்சரியமாக பார்ப்பது, கணியான் கூத்து. மகுட ஆட்டம் என்று நவீனமாக
அழைக்கப்படும் இதில், தாளம் தட்டுபவர்களிடம் இசை ஜாம்பவான்கள் பிச்சை வாங்க
வேண்டும்.
இரவு
நெருங்கவும் வில்லிசை. அந்த மேடையில்தான் இப்போது உட்கார்ந்திருக்கிறான்.
நொச்சிக்குளம் முத்துலெட்சுமி. இவனுடைய ஒரு சித்தி மாதிரி இருப்பாள். பக்கத்தில்
பக்கவாத்தியப்பெண்ணின் கருப்பில் இவள்
இன்னும் அழகு. அணிந்திருக்கும் நகைகளும் அமர்ந்திருக்கும் வாகும், ஆட்டத்தின்
அழகும் சரஸ்வதியே கதை பாடியது போலிருக்கும். பக்கத்தில் குடமடிக்க அவளுடைய கணவர்,
அப்போது பேமஸாக இருந்த ஓட்டை பனியனோடு, பத்துபவுன் சங்கிலி தொப்பையில் முட்ட, கையை
சுழற்றி சுழற்றி அவர் குடமடிக்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும். அதிகமாக
கிழடுகள்தான் உட்கார்ந்திருக்கும். அவ்வப்போது பணக்காரன் ஒரு நூறு ரூபாயை கொடுக்க
உடனே,
“..நமக்கு நூறு பவுன் பரிசளித்த .....பாசமிகு
அண்ணன்.....”
“யார்...யாரம்மா...”
“வடக்கு
விஜயநாராயணம் பெரியவீடு ராசாப்பாண்டியன் அவர்கள் குடும்பம், கொடி கொடி கோத்திரம்,
வழி வழி வம்முசமெல்லாம், நம்ம ஒத்தப்பனை சுடலைமாடசாமி அருளாலே....”
என்று ஆரம்பித்து வாழ்த்துவார்கள். தமிழில்
வல்லின, மெல்லின உச்ச்சரிப்புகளுக்கு எத்தனை மாத்திரைகளை தொல்காப்பியம்
வகுத்திருக்கிறதோ, அதைச் சரியாகக் கடைபிடிப்பவர் முத்துலெட்சுமி ஒருவர்தான் என்று
அமுதன் நினைக்கும் அளவுக்கு உச்சரிப்பு அட்சர சுத்தம். விசாரித்துபார்த்தால் அந்த
ஆளுக்கு இப்போதைக்கு ஊரில் வீடே இருக்காது. ஆனாலும் பெரியவீடு பட்டத்தை
விடமாட்டார். இந்த இடைச்செருகல் இல்லையென்றால் ஒரு மணிநேரத்தில் முடியும்
சுடலைமாடசாமி கதையை ஒரு இரவு முழுவதும் இழுக்க முடியாது.
கிழக்கே
கரகாட்டம் ஆரம்பித்துவிட்டால், வில்லுப்பாட்டுக்கு முன்பு இந்தக்கூட்டமும்
இருக்காது. குருசாமித்தேவர் மகனும், கிட்டப்பா பேரனும் கொட்டி முழக்குவார்கள்.
ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை தேவர் பாட்டு பாடியே ஆகவேண்டும். நேரம் ஆக ஆக,
சிருங்காரத்தகவல்கள் ஆரம்பமாகும். குறவனும் குறத்தியும் மைக் பிடித்துவிட்டால்,
நல்லமனிதன் நின்று கேட்க முடியாது. அமுதனுக்கு கேட்க ஆசையாக இருந்தாலும் வேறு
யாராவது பார்த்து வீட்டில் சொல்லிவிட்டால் என்ற பயமும் இருக்கும். ஊர்
முழுக்கவும், ஆலய வளாகம் முழுவதும் டிஜிட்டல் போர்டுகளுக்கு பஞ்சமே இருக்காது.
தேவர் படம், கார்த்திக் படத்துடன், தங்கள் தாத்தமார்களின் பழைய படங்களையும் தூசு தட்டி
எடுத்து அச்சடித்து, அருகிலேயே கிடா மீசையுடன் தனது படத்தையும் பெரிதாக போட்டு,
அரிவாள் இல்லாத குறையாக யாரையோ அடிக்கப்போவது மாதிரி போஸ் கொடுத்துக்கொண்டு,
இரண்டாவது படிக்கும் தன் மகனுக்கும் வேட்டி சட்டை கட்டி, அவனையும் போர்டில்
வீரனாக்கி, கீழே, இரா.சா.பா.உ. என்று பத்துதலைமுறை இனிஷியல்களையும் எழுதி பெயரை
போட்டு, போகும்போதும் வரும்போதும் தானே பார்த்து பெருமைப்பட்டு, பக்கத்தில் நின்று
போட்டோவும் பிடித்து அமர்க்களப்படுத்துவார்கள். கிலோமீட்டர் கணக்கில்
மிட்டாய்க்கடைகளும், ஜம்போ இராட்டினங்களும், தரைவிரிக்கப்பட்ட பூலித்தேவர்,
மருதிருவர், வேலுநாச்சியார், சுபாஷ் சந்திர போஸ், தேவர் கார்த்திக்க படங்களும்,
சர்க்கஸ் கூடாரங்களும், மரணக்கிணறுகளும் என்று முழுக்கொடைவிழாவும் அமுதனின்
கண்ணுக்குள் வந்து சென்றது. அனுபவிக்கமுடியாதது வருத்தமாக இருந்தது. எல்லோரையும்
போலல்லாமல் பண்பாட்டுப் பிடிப்புள்ளவன் அமுதன். சாமி வேட்டைக்கு போவதையும்,
அவருடன் மகுட ஆட்டக்காரர்கள் பாடிக்கொண்டே செல்வதையும் பார்க்க பிரமிப்பாக
இருக்கும்.
“....ஏ...ஒத்தப்பன ஆண்டவன்தான்....ஏ..ஏ....ஏ...”. “ஏ..ஓடிவாரான் .....ஆடிவாரான்.....”
“பதுங்கி
வாரான்....பாஞ்சு வாரான்....ஏ....ஏ.....ஏ.....”
:பனைமரத்த புடுங்கி வாரான்...........”
“...ஏ...ஆனப்பந்தம்
கையிலேந்தி...ஏ....ஏ..ஏ.......” “..ஆண்டவன்தான்
மாயாண்டி....ஏ....ஏ.......ஏ.....”
உண்மையிலேயே
சுடலைமாடசாமி வேட்டைக்கு கிளம்புவதைப்போல ஆச்சரியமாக இருக்கும். மூணு செட்டு
மேளம், வில்லு கணியானோடு , இரவு பன்னிரண்டு மணிக்கு சாமக்கொடைக்கு சுடலைமாடசாமியை
வரத்தும் பாங்கு, எல்லோரும் வாய்மூடி மவுனமாய் நிற்க, துவளைக்குட்டி வெட்டப்பட்டு,
ஈரக்குலையும் தாமரைக்காயும் இறைவனுக்கு எடுத்து வைக்கப்பட்டு, சின்ன முனகலுடன்
ஆட்டின் ஆட்டம் அடங்க, சரியான நேரத்தில் சேவலை வண்ணான் கழுப்போட, பரணியில் பன்றி
ஒன்று நெஞ்சு கீறப்பட, சாமியாடிகள் மட்டும் ம்....ம்.......ம்..என்று கூச்சலிட,
படைப்புத்திரை விளக்கப்பட, ஒரே நேரத்தில் அத்தனை வாத்தியங்களும் முழங்க சாமிக்கு
தீபாராதனை காட்டப்பட, அப்படியே சுடலைமாடசாமி வானுலகிலிருந்து கூட்டத்துக்குள்
வந்திறங்கிய மாதிரி ஓர் அனுபவத்தை அங்கிருக்கும் அத்தனை உடல்களும் அடையும். என்ன
செய்வது?. எப்போதும் தான் சாமி இருக்கிறார். தன்னைத்தானே ஆறுதலடைந்து கொண்டான்
அமுதன். பூசாரி வந்துவிட்டார்.
தன்னுடைய
வாழ்க்கையின் நிறைவுக்காலம் வரை மறக்கமுடியாத, ஒரு நிகழ்வை அனுபவிக்கப்போகிறோம்
என்ற எண்ணம் அப்போது அமுதனுக்குள் எழுந்திருக்க வாய்ப்பில்லை ... வந்த வேகத்துக்கு
பூசாரி, சாமியாடி சுடலைக்கன்னண்ணன் இன்னும் வரல.......”
கேட்டாரா
இல்லை தகவலா தெரியவில்லை.
“இன்னும்
வரலிய சாமி..” ஆண்டாங்குளத்து அம்மாள் பதில் சொன்னாள். சொல்லிக்கொண்டிருக்கும்போதே
சாமக்கொடையில் சுடலைமாடசாமி குதிப்பதைப்போல சைக்கிளிலிருந்து குதித்தார் சுடலைக்கண்ணு
பாண்டியன். வடக்கூரில் பெருநிலக்கிழார்.
“..இந்தா
வந்துட்டோளே....ஆயுசு ஐநூறு......”
“..என்னவே
குறக்கீரு...ஒத்தப்பன ஐயா அருளால ஆயிரம்னு சொல்லும்..”
பூசைக்கான
ஏற்பாடுகளை செய்தார் பூசாரி. தொட்டித்தண்ணீரை எடுத்து பவ்யமாக சின்னக்குழந்தயை
நீராட்டுவதுபோல, பயபக்தியுடன் சாமிக்கு அபிஷேகம் செய்தார். பட்டுத்துணியால்
துடைத்தெடுத்து தான் கொண்டுவந்திருந்த பால், நெய், தயிர், இளநீர், திருநீறு
சந்தனம் என்று அனைத்து பொருட்களாலும் அபிஷேகம் செய்தார். ஒவ்வொரு முறையும்
தீபாராதனை காண்பித்தார்.
“கடசி
வெள்ளிக்கிழமல்லா...அதான்....” அபிஷேகங்களை நியாயப்படுத்தினார்கள்
ஆண்டாங்குளத்தார்கள். அமுதன் கொடைக்கு வந்திருந்தால் கூட இத்தனை அழகாய் திருமுழுக்கு
பார்த்திருக்கமுடியாது என்ற திருப்தியில், கூப்பிய கையைப் பிரிக்காமல்
பார்த்துக்கொண்டிருந்தான். சின்னதாய் அலங்காரம் செய்யப்பட்டு எண்ணெய் முழுக்கு நடத்தப்பட்டது.
எண்ணெய் முழுக்கில், இருண்ட கண்களும், திரண்ட மீசையுமாய், உயிரோட்டமாய்
காட்சியளித்தார் சுடலையாண்டவர். பூசைக்கான நேரம் ஆரம்பமானது. சன்னதியின் முன்பு
ஒரு தடியங்காய், அதன்மேல் ஒரு தேங்காய், அதன்மேல் ஒரு முட்டை, அதன்மேல் ஒரு எழுமிச்சம்பழம்
எல்லாவற்றையும் அடுக்கி அப்படியே நிர்கவைத்தார் பூசாரி. ஆச்சரியமாய் பார்த்தான் அமுதன்.
ஒவ்வொன்றை வைக்கும்போது சற்றுநேரம் சாமியைப் பார்த்து ஏதொ பிரார்த்தனை செய்தார்.
ஒரேமுறையில் அப்படியே ஒட்டினார்ப்போல நின்றுகொண்டது அத்தனையும். வெட்டரிவாளை
எடுத்தார். “..ஹேய்......” உரக்கச் சத்தமிட்டுக்கொண்டே எழுமிச்சம்பழத்தில்
வெட்டினார். நான்கு பொருட்களும் வெட்டுப்பட்டு எட்டு துண்டுகளாகின. தடியங்காயின்
உள்ளே குங்குமத்தை தடவினார். மிகவும் அவசரப்படுகிற ஆள்மாதிரி வேகவேகமாக எல்லாமே சில
நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. ஆண்டாங்குளத்துக்காரர்கள் கொம்பு திருகிய செம்புலிக்கிடாயை
அவிழ்த்துக்கொண்டு வந்தார்கள். ஆடாமல் அசையாமல் நின்றது கிடா. அன்பே உருவான
ஆண்டவன் சன்னதியில் ஆட்டுப்பலியா?. அமுதனுக்கு வித்தியாசமாக இருந்தது.
“....ம்.......கயித்த
அவுறு.......”
ஒரு
பழைய மாலையை எடுத்து வந்து ஆட்டின் கழுத்தில் சுற்றப்பட்டது. வெட்டப்ப்படப்போகிறோம்
என்கிற எந்த பயமும் ஆட்டின் முகத்தில் இல்லை. சின்னவயதில் “..நாளைக்கு
சாகப்போகிறோம் என்பது ஆட்டுக்கு இன்னைக்கே தெரிஞ்சிருமாம்...” என்று நண்பர்கள்
சொன்னது நினைவுக்கு வந்தது. ஒருவேளை தெரிந்த காரணத்தால் தைரியமாக நிற்கிறதோ
என்னவோ..?
“..கொஞ்சம்
தண்ணி தெளிங்க சாமி...............ஒண கொடுக்கட்டும்......”
ஒண
கொடுத்தல் என்பது, ஆடு தலையை ஆட்டுவது. அப்படி ஆட்டிவிட்டால் இறைவனுடைய பலிக்கு
ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதி வெட்டிவிடுவார்கள். அமுதன் கூட சின்னவயதில்
அப்பாவிடம் “.....அந்த ஆடே தலைய ஆட்டுதப்பா...அப்புறம் வெட்டுனா என்னா...?”.
வெகுளியாக கேட்டிருக்கிறான்.
“..ம்...தண்ணி
ஊத்தாம வெட்டச்சொல்லு பாப்பம்...குளிருல தண்ணிய வெளிய தெறிக்கதுக்காகத்தான் அது
தலய ஆட்டுது.... இல்லாம வெட்ட
சம்மதமில்ல... ஒரு காலத்துல இருந்திருக்கலாம். இப்போதுதான் தண்ணி ஊத்தி சம்மதிக்க
வச்சுடுறானுகள...தண்ணி ஊத்துனா எந்த ஆடுதான் தலய ஆட்டாது... அதுலயும் நேரமானா
காதுக்குள்ளே ஊத்திரானுக... ஆட்டாம என்ன செய்யும்...” அந்த கூத்தை இப்போது
அமுதனும் பார்க்கப்போகிறான். பூசாரி ஆட்டின் மேல் தண்ணீரை தெளித்தார். எருமை
மாட்டின் மீது மழை பெய்தது போல எந்த உணர்ச்சியும் காட்டாமல் அது அப்படியே
நின்றது....
“..இன்னும்
கொஞ்சம் தெளிங்க சாமீ...”
ம்ஹூம்...எந்த
எதிர்வினையும் காட்டவில்லை கிடா.
கொஞ்சம்
இடதுகாதை மேலே தூக்கிக்கொண்டு “...ஊத்துங்க சாமீ.....”
எவனுக்கோ
வந்த வினை போல நின்றது கிடா...மருந்துக்குக்கூட தலையை ஆட்டவில்லை.
“..வலுத்த
கிடா....கூடகொஞ்சம் தண்ணிய ஊத்துங்க சாமீ.....” தொட்டியில் ஒரு குடம் தண்ணீர்
எடுத்து வந்து சாமியை நோக்கி காண்பித்துவிட்டு பொலபொலவென்று ஊற்றினார் பூசாரி.
எந்த பதிலுமில்லை. அமுதனுக்கே கொஞ்சம் ஆச்சரியமாக போய்விட்டது. ஒருவேளை இந்த
ஆட்டினுடைய தோலுக்கு உணர்ச்சி இல்லையோ...ஊற்றியிருக்கிற தண்ணீரைப் பார்த்தால்
ஒருமுறையாவது தலையை ஆட்டவேண்டுமே... என்னது இது வித்தியாசம். இன்னொரு குடம்
தண்ணீர் ஊற்றப்பட்டும்கூட கிடா எந்த அசைவும் காட்டவில்லை. நேரம் ஆக ஆக ஆண்டாங்குளத்துக்காரர்களுக்கு
முகம் வாடிப்போனது. கிடா தலையை ஆட்டாமல் இருந்தால் குடும்பத்துக்கு நல்லதில்லை
என்று யாரோ சொல்லிக்கேட்டிருக்கிறான் இவன்.
“...ஏ..ஒத்தப்பன
அய்யா...நான் என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிச்சு இந்த பலிய ஏத்துக்கணும்
சாமீ...ஒன் விளயாட்ட இந்த சின்னப்பிள்ளேல் கிட்ட காமிக்காதா ஆண்டவா....”
உயிருள்ள
இறைவனிடம் பெசுவதுமாதிரி பூடத்தின் முன்னின்று வேண்டினாள் ஒரு பெரிய அம்மாள்.
அவர்களின் அம்மாவைக் இருக்குமென்று நினைத்தான் அமுதன். கிடைக்கு ஊற்றிய தண்ணீர்
சற்று அவனுடைய காலிலும் பட்டதால் இவனுக்கே கொஞ்சம் குளிர்விறைப்பு மாதிரி
தோன்றியது. ஆனால் மங்குணி மாதிரி நின்றது
கிடா. கிட்டத்தட்ட ஆண்டவனைப்பார்த்து அழக்கூடிய நிலைமைக்கு வந்துவிட்டார்கள்
ஆண்டாங்குளத்துக்காரர்கள். “....ஒணகொடுக்கலன்னா வெட்டப்பிடதப்பா....” பெரிசு ஒன்று
கருத்து தெரிவித்தது. அவர்களுடைய பிரார்த்தனை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய்
போனது.
யாருக்கும்
என்ன பேசுவது என்றே புரியவில்லை. எல்லோர் முகத்திலும் கலவரம் கலந்த பயம்
குடிகொண்டிருந்தது. அமுதனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அமைதியாக கிடாயையே
பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
“...ஏய்.........ம்..ஹூம்....ம்ஹூம்..........ஆ...........ஏய்ய்............................”
சும்மா
ஏனோதானோவென்று எல்லோருடனும் சாமிகும்பிட்டுக்கொண்டிருந்த
சுடலைக்கண்ணுப்பாண்டியனுக்கு சந்நதம் வந்துவிட்டது. சட்டை கழட்டப்பட்டு சந்தனம்
பூசப்பட்டது. சாமிக்கு போட்டிருந்த மாலைகளில் ஒன்றை கழற்றி பாண்டியனுக்கு போட்டு,
பூசாரியிலிருந்து அத்தனை பெரும் பவ்யமாய் இவருடைய முகத்தையும், சாமியின்
சிலையையும் பார்ப்பதுமாக இருந்தார்கள்.
“..என்ன
நெனச்சிகிட்ட ஒத்தப்பனயான......ம்....... எம் பொருள எதுக்குப்பா....லேட்
பண்ணுன.......” சாமி தங்கிலீசில் பேசியது.
ஆண்டாங்குளத்துக்
கோனாரின் மொத்தக்குடும்பமும் தேவரின் காலில் விழுந்தது. திருநீற்றுக்கொப்பறையை
கையில் கொடுத்தார் பூசாரி. இன்னும் அவர் கையை ஆட்ட, சாமி முன்னிருந்த வல்லயமும்,
ஒரு இலையில் கொஞ்சம் உதிரிப்பூவும் மடித்து கொடுக்கப்பட்டது. வல்லயத்தை தரையில்
ஊன்றிக்கொண்டு அதன்பிடியில் நின்று ஆடினார் தேவர். எழுந்த மனிதரின் கையில்
திருநீற்றைத் திணித்து.
“....யார
ஏமாத்தப்பாக்க...நீ......ம்..........ம்.............” பலமாக அதட்டினார்.
ஆண்டாங்குளத்து கோனாருக்கு அழுகையே வந்துவிட்டது.
“கொடையோட
கோயம்புத்தூருல மகா வீட்டுக்கு போயிட்டோம் சாமீ........ என்ன குத்தம் இருந்தாலும்
நீதான்யா மன்னிக்கணும்....”
“..இது
ஒனக்கு கடைசி எச்சரிக்க......இனி வருஷம் தப்பாம எம்பொருள எங்கிட்ட
சேத்துரனும்.....சொல்லு.....சேப்பியா.........”
“ஒரு
வருஷமும் தவறல சாமி..... இந்த வருஷந்தான் தப்பிப்போச்சு..... ஒத்தப்பன அய்யாதான்
பிள்ளேல் குத்தத்த மன்னிக்கணும்.......”
“....ம்..ஏய்...புடி...திருநாற......இனி
ஒனக்கு ஒரு கொறையும் வராது....நான் ஓங்கூடயே இருப்பேன்...என்ன காரியம் செஞ்சாலும்
என்ன நெனச்சுகிட்டு ஆரமி..... ஒரு கொறையும் வராது......கலங்காத.....இப்போ ஊத்து
தண்ணிய....”
அவருக்கு
அருள் இறங்கியது மாதிரி தெரிந்தது. இருந்தாலும் வல்லயத்தைக் கையில்
பிடித்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தார். நடந்ததத்தனையும் பார்த்துக்கொண்டு
கல்லுளிமங்கன் மாதிரி நின்ற கிடாய் மீது பூசாரி பேருக்கு தண்ணீர் தெளித்தார்.
சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது மாதிரி, வலதும் இடதுமாக மூன்றுமுறை தனது திருகிய கொம்பு
தரைதட்டுமளவுக்கு ஆட்டியது செம்மறிக்கிடா.... வெட்டப்பட்டது. தலை துண்டானதில்
பீய்ச்சிய குருதி சாமி பீடத்தை தொட்டு வடிந்தது. சாய்வாக இருக்கும் சாமியின்
கல்கொண்டை கொஞ்சம் நிமிர்ந்தது மாதிரி தெரிந்தது அமுதனுக்கு. நடந்த அதிசயத்தில்
பிரமித்துப்போன அமுதனுக்கு அடுத்தது புரியவில்லை. நின்ற எல்லோரும் பாண்டியனின்
காலில் விழுந்து திருநீறு வாங்கினார்கள். சாமியை கும்பிட்டுவிட்டு இவனும் திருநீறு
வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான்.
சாமியாட்டம்
பொய்..... அது ஒரு வகையான நரம்புத்தளர்ச்சி.... தண்ணி ஊட்தாவிட்டால் கிடாய் தலையை
ஆட்டாது. தலையாட்டுவது ஒரு ஏமாற்று வேலை. அன்பே உருவான ஆண்டவனுக்கு பலி தேவையில்லை.
இறைவனின் பெயரைச் சொல்லி நாம் இறைச்சி உண்கிறோம் என்ற அமுதனின் கொள்கைகளெல்லாம்
நடந்த நிகழ்ச்சிகளால் காற்றி பறந்து கொண்டிருந்தன. ஆண்டவனை, அவன் தன்மையை இன்னும்
ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறான் அவன். ‘’’’ உலகெல்லாம் உணர்ந்தோதற்கரியவன்.....”
அருண்மொழித்தேவர் எத்தனை பெரிய ஞானி.........
என்றும்
அன்புடன்....
இரா.பார்த்தசாரதி.....
(போற்றுவார்
போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.....)